1.
எங்கும் வெயில்
வெப்பச் சாலைகளில் நிசப்தம்
நீளும் மதியம்.
2.
சுருங்கி மறையும் நிழல்கள்
தலைக்கு மேல் நண்பகல்
கனக்கும் அமைதி.
3.
சுழலும் மின்விசிறி
சோம்பல் முறிக்கும் வட்டங்கள்
கரைகிறது நேரம்.
4.
பொன்னாக மாம்பழங்கள்
பிசுபிசுக்கும் கைகள்
ஒளியாக வழிகிறது இனிப்பு.
5.
சூடான நிலம்
வெற்றுப் பாதங்கள்
ஓடுகிறது குழந்தைமை.
6.
நெற்றியில் வியர்வை
உப்பு வெயிலின் சந்திப்பு
உடலோடு ஒட்டும் பகல்.
7.
தொலைதூரக் குயிலோசை
வெயிலில் வளையும் பாடல்
உருகும் எதிரொலி.

8.
சுருண்டு உடையும் சருகுகள்
குளிர்ச்சியைத் தேடும் காற்று
ஏங்கும் பூமி.
9.
அசையாத திரைச்சீலைகள்
வழி மறக்கும் தென்றல்
நிரம்பும் மெளனம்.
10.
வந்தது மாலை
ஆசுவாசிக்கிறது செவ்வானம்
தளர்கிறது வெப்பம்.
11.
சில்வண்டுகளின் ரீங்காரம்
பகலைக் குளிர்விக்கும் இரவு
மருந்தாகிறது இருட்டு.
12.
மண்பானைத் தண்ணீர்
தொண்டையில் குளிர்ச்சி
மண்ணைச் சுவைத்த நிம்மதி.
13.
கானலாகச் சாலைகள்
ஏமாற்றும் கண்கள்
சூடான கனவுகள்.
14.
ஆடாத பனைகள்
அவற்றின் தலைகளில் வெயில்
கொட்டாவி விடுகிறது பொழுது.
15.
வானில் முதல் கருமேகம்
நீலக்கடலில் நம்பிக்கை
காத்திருக்கிறது மழை.
**
குறுங்கவிதைகள் மற்றும் குயில் படம்: ராமலக்ஷ்மி