Home இதழ்கள்இதழ் 12நல்லாச்சி – 31
This entry is part 31 of 31 in the series நல்லாச்சி

செல்லாச்சி வீட்டில் அமளியாயிருக்கிறதென
ஓடுகின்றனர் நல்லாச்சியும் பேத்தியும்
பிடிவாதம் கொண்ட பேரப்பிள்ளைகளால்
இடிந்து அமர்ந்திருக்கிறது குடும்பம்
அவர்கள் உதிர்த்த
தகாத வார்த்தைகளும் தற்கொலை அச்சுறுத்தல்களும்
இறைந்து கிடக்கின்றன வீடெங்கும்
வாசலில் வழியும் ஒன்றிரண்டு வார்த்தைகளால்
எட்டிப்பார்க்கும் வம்பர்களும் அன்பர்களும்
இன்னும் குறுக வைக்கின்றனர் அக்குடும்பத்தை
பெற்றோரும் அவர்களைப் பெற்றோரும்
ஒருவர்மேல் ஒருவர் குற்றப்பத்திரிகை வாசிக்கின்றனர்
செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டதாய்
இருவர் கூற்றிலும்
முழுக்க மெய்யுமில்லை முழுக்கப் பொய்யுமில்லை

எங்கே உருகவேண்டும் எதற்கு இறுகவேண்டுமென
எல்லை வகுக்காததன் விளைவே இது
என்கிறாள் நல்லாச்சி
குறைநீரில் பூஞ்செடி வாடாதா என்கிறது அக்குடும்பம்
அதிகநீர் அழுகவைக்கும் என்கிறாள் நல்லாச்சி
அவசியமெனில் செடியைச் சற்று நறுக்கவும் செய்யலாம்
சிறு கண்டிப்பு அவசியமே
மென்மை எதிர்பார்த்து பூஞ்சையாய் விளையக்கூடாது
கல்வியும் ஒழுக்கமும் இருகண்கள்
ஒன்றைப்போற்ற இன்னொன்றைத் தூற்றவேண்டா
பெரியோர் சிறியோர் பரஸ்பர மதித்தலில்
கிளைவிட்டுப் பொலியும் அன்புமலர்கள்
பின்னேர் சரிவரத் தொடர
முன்னேர் தடுமாறாமல் செல்லல் வேண்டும்
அத்தனையும் கேட்டுக்கொள்கிறது அக்குடும்பம்
பூனைக்கு மணிகட்டியிருக்கிறாள் நல்லாச்சி
உரைத்தவையெல்லாம் உரமோ
விழலுக்கிறைத்த நீரோ யாரேயறிவார்.

Series Navigation<< நல்லாச்சி – 30

Author

You may also like

Leave a Comment