செல்லாச்சி வீட்டில் அமளியாயிருக்கிறதென
ஓடுகின்றனர் நல்லாச்சியும் பேத்தியும்
பிடிவாதம் கொண்ட பேரப்பிள்ளைகளால்
இடிந்து அமர்ந்திருக்கிறது குடும்பம்
அவர்கள் உதிர்த்த
தகாத வார்த்தைகளும் தற்கொலை அச்சுறுத்தல்களும்
இறைந்து கிடக்கின்றன வீடெங்கும்
வாசலில் வழியும் ஒன்றிரண்டு வார்த்தைகளால்
எட்டிப்பார்க்கும் வம்பர்களும் அன்பர்களும்
இன்னும் குறுக வைக்கின்றனர் அக்குடும்பத்தை
பெற்றோரும் அவர்களைப் பெற்றோரும்
ஒருவர்மேல் ஒருவர் குற்றப்பத்திரிகை வாசிக்கின்றனர்
செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டதாய்
இருவர் கூற்றிலும்
முழுக்க மெய்யுமில்லை முழுக்கப் பொய்யுமில்லை
எங்கே உருகவேண்டும் எதற்கு இறுகவேண்டுமென
எல்லை வகுக்காததன் விளைவே இது
என்கிறாள் நல்லாச்சி
குறைநீரில் பூஞ்செடி வாடாதா என்கிறது அக்குடும்பம்
அதிகநீர் அழுகவைக்கும் என்கிறாள் நல்லாச்சி
அவசியமெனில் செடியைச் சற்று நறுக்கவும் செய்யலாம்
சிறு கண்டிப்பு அவசியமே
மென்மை எதிர்பார்த்து பூஞ்சையாய் விளையக்கூடாது
கல்வியும் ஒழுக்கமும் இருகண்கள்
ஒன்றைப்போற்ற இன்னொன்றைத் தூற்றவேண்டா
பெரியோர் சிறியோர் பரஸ்பர மதித்தலில்
கிளைவிட்டுப் பொலியும் அன்புமலர்கள்
பின்னேர் சரிவரத் தொடர
முன்னேர் தடுமாறாமல் செல்லல் வேண்டும்
அத்தனையும் கேட்டுக்கொள்கிறது அக்குடும்பம்
பூனைக்கு மணிகட்டியிருக்கிறாள் நல்லாச்சி
உரைத்தவையெல்லாம் உரமோ
விழலுக்கிறைத்த நீரோ யாரேயறிவார்.