Home இதழ்கள்இதழ் 14நல்லாச்சி – 39
This entry is part 39 of 40 in the series நல்லாச்சி

கிளை நுனியில் ஊசலாடும்
தூக்கணாங்குருவியின் பெருவீடு கண்டு
வியப்புடன் வினவினாள் பேத்தி
“கம்பியும் இல்லை, காரையும் இல்லை,
எப்படி முடைந்தது இத்தகு பேரழகை?
பட்டம் பயின்ற பொறியாளராலும்
இப்படியோர் விந்தை இயலுமோ ?”

மென்னகை புரிந்த நல்லாச்சி
இயற்கையின் அதிசயங்களில்
இதுவுமொன்று என்றாள்;
கூட்டுக்குள் மழைத்தூறல் நனைக்குமே
இரவானால் வெளிச்சத்திற்கு என்செய்யும்
அசராமல் கேள்விகளை அடுக்குகிறாள் பேத்தி

‘புல்லின் பின்னல் மழையைத்தடுக்கும்
மின்மினிகள் பதித்த சேற்றுருண்டை விளக்காம்’
நல்லாச்சியின் விளக்கத்தில் மகிழ்ந்து
“எனக்கும் தருவாயோ இப்படியொரு கூடு
என் பொம்மைகள் குடியிருக்க?”
ஆசையாய் அணைத்துக் கேட்கிறாள் பேத்தி
குப்பையின்றி உன் கூட்டைச் சுத்தப்படுத்து
வெகுமதியாய்க்கிடைக்கும் குருவிக்கூடு
நெற்றியில் வருடும் விரல்களில்
வழிகிறது அன்பின் மொழி
ஆமோதிக்கின்றன குருவிகளெல்லாம்.

Series Navigation<< நல்லாச்சி – 38நல்லாச்சி – 40 >>

Author

You may also like

Leave a Comment