1
சுரைக்குடம் கட்டிச் சில நாட்கள்
காற்றடைத்த பையுடன் பலநாட்கள்
கவிழ்த்த குடத்துடன் ஒன்றிரண்டு நாளே
கடப்பாரை நீச்சலை மறந்து
கெண்டை மீனாய் நீந்துகிறாள் பேத்தி
நீரில் தானுமொரு துளியாய்க்கலந்தவளுக்கு
நிலமென்பது நினைவிலேயே இல்லை
ஆறும் குளமும் யோசிக்கின்றன
அடுத்த ஊருக்குப் போய்விடலாமென
தவளைகளெலாம் தப்பித்துவிட்டன எப்போதோ
‘கலங்கியது தானே தெளியும்’
அமைதிப்படுத்துகிறது மூத்த ஆறொன்று
‘வாய்ப்பில்லை’ என்கிறது வாய்க்கால்
ஊரிலுள்ள நீரிலெலாம் குடைந்தாடியவள்
கிணறுகளை ஏனோ சீண்டுவதில்லை
சாகசம் அங்குபோல் எங்குண்டு என்போரை
கிணறுகளின் பிரதாபம் பாடுவோரை
முற்றத்து மூலையில் நிறுத்துவாளவள்
பெருமழையில் விழுந்த தாத்தா
இரவெல்லாம் தவித்த கிணறு
தூர்ந்து போகாமல்
இன்றும் நினைவுகளில் அலையடிப்பதை
நல்லாச்சியும் அவளுமே அறிவர்.