திருவை மு.இரா. கவிதைகள் – 5

திரிகாலம்

தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள
அந்த மாதத்திற்குக் குழப்பம் இருந்தது
அதே குழப்பம்தான்
அந்த நாளிற்கும் வந்தது
தன்னிலை திரிந்து மாறி நின்றன
தொடக்கத்தில் கோடை மழையெனப்
பெயர் வாங்கி அடித்து வாங்கிய மேமாத மழையும்
நள்ளிரவுக் கோலமாய்க் கோடை மதியமும்
தன்னிலைத் திரிந்து அப்போதைய நிலையின்
வெளியீடாய் இருக்கக் கற்றுக்கொண்டன.

பொருளுலகு

‘ஃபெர்பார்மன்ஸ் இல்லையாம்’
‘வயசாயிடுச்சாம்’
‘அவுட் டேட்டட் ஆயிட்டானாம்’
என அழ மட்டும்தான் இல்லை…
புலம்பித் தீர்த்த மகனை அணைத்து
ஆறுதலுரைத்த வயதான அப்பாவுக்கு
பால் இல்லையென்று அடிமாட்டுக்கு
விலைபேசிய கன்றீன்ற பசு நினைவு எட்டியது
எட்டியும் என்ன
பசு இருந்த சுவட்டோடு தனித்திருந்த தொழுவம்
வேறொன்று வர மறுதினமே இயங்கியது

Series Navigation<< திருவை மு.இரா. கவிதைகள் – 4

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

Related posts

பயமா.. உனக்கா?!

பேரன்பின் சாட்சியங்கள் – அமுதவல்லி நாராயணனின் ’என்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பை முன் வைத்து…

*திம்மராஜபுரத்துக் கதைகள்* –  நூல் விமர்சனம்