Home சிறுகதைவேர்கள்

முற்றத்தில் நின்றிருந்த அந்த ஒற்றை வேப்பமரம், அதிகாலைப் பனியில் நனைந்து சொட்டிக் கொண்டிருந்தது. மாரிமுத்துவின் கையில் இருந்த பழைய இரும்புப் பெட்டி அப்படியொன்றும் கனக்கவில்லை. திணிக்கப்பட்ட ஒன்றிரண்டு துணிமணிகள் என்ன கனத்து விடப்போகின்றன? வீட்டின் கதவை இழுத்துப் பூட்டியபோது எண்ணெய் இடப்படாமல் இறுக ஆரம்பித்திருந்த கீல்கள் சப்தித்தன. அந்த ‘கிர்’ என்ற சத்தம், அவனது இதயத்தின் ஏதோ ஒரு மூலையை அறுப்பது போலிருந்தது. அந்தச் சத்தம் அவனுக்குப் புதிதல்ல; ஆனால், இன்று அது ஒரு மரண வீட்டின் இறுதி மௌனத்தைப் போலத் தாளமுடியாததாக இருந்தது.

மாரிமுத்துவின் கைகள் நடுங்கின. இறுக்கிப்பிடித்திருந்த பெட்டியின் கைப்பிடி அவனது உள்ளங்கையில் ஆழமாகத் தடம் பதித்திருந்தது. இன்னும் இறுக்கிக்கொண்டான். வீட்டின் நிலைக் கதவைச் சாத்தி, துருப்பிடித்த பூட்டைத் தொங்கவிட்டபோது, அவனது கைவிரல்கள் அனிச்சையாக அந்த மரக்கதவை ஒருமுறை வருடின. அந்த வீட்டைக்கட்டும்போது முறைப்படி முதன்முதலில் நிலைவாசல்தான் நிறுத்தப்பட்டது. சந்தனம் குங்குமம் இடப்பட்டு மாவிலைத்தோரணமும் நிலைமாலைகளும் அணிந்து நின்ற அந்தக்கதவை சட்டத்தோடு அவனது தாத்தாவே தூக்கி நிறுத்தினாராம். அவரது வியர்வை வாசனை இன்னும் அந்தத் தேக்கு மரத்தின் வரிகளில் தங்கியிருப்பதாக அவன் உணர்ந்தான். அவர் கஷ்டப்பட்டுக் கட்டிய வீட்டை தான் கைவிட நேர்ந்ததை எண்ணி தன்னையே வெறுத்தான்.

இளங்காலையின் காற்றில் முற்றத்து வேப்பமரம் தன் இலைகளை மெதுவாய் உதிர்த்தபடி நின்றது. ஒரு சில இலைகள் அவன் தலைமீது விழுந்தது, அவனை “எங்க போனாலும் புத்தியாப் பொழைச்சுக்கோ” என ஆசீர்வதிப்பதாய்ப்பட்டது. “போய் வருகிறேன்” என்று யாரிடம் சொல்வது? மனிதர்கள் இல்லாத வீதிகளில் மௌனம் மட்டுமே அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தது.

வீட்டின் தலைவாசலில் தெருவில் இருந்த மண்ணைத் தொட்டுத் தன் நெற்றியில் வைத்துக் கொண்டான். ஒரு கைப்பிடி மண்ணை, கைக்குட்டையில் பொதிந்து பொட்டலமாய்க் கட்டிக்கொண்டான். பிறந்து வளர்ந்த ஊரையும் மண்ணையும் விட்டு பிடிமண்ணுடன் வெளியேறுவது அவனுக்குச் சொல்லொணா வேதனையைக்கொடுத்தாலும், அந்த மண் அவனுக்குச் சொல்லாத விடைபெறலையும் சொன்னது.

படியிறங்கி நடக்கத் தொடங்கியபோது, அவனது கால்கள் தன்னிச்சையாக நின்றன. திரும்பிப் பார்த்தான். அந்த வீடு, அவனது தாத்தா காலத்தில் எழுப்பப்பட்டது. தலைமுறைகள் கடந்தும் உறுதியாக நின்றுகொண்டிருந்தது. அவன் மகன் சிறுவயதில் சுவரில் கரியால் கிறுக்கிய சித்திரங்கள் மழைக்கால ஈரத்தில் நனைந்து உலர்ந்து மங்கலாகத் தெரிந்தன. அந்தச் சுவர்களுடனான அவனது உறவு வெறும் செங்கல் மற்றும் சாந்தால் மட்டும் பிணைக்கப்படவில்லை. ஞாபகங்கள் ஒவ்வொரு அணுவையும் இணைத்திருந்தன, ஒவ்வொரு விரிசலிலும் ஒரு கதையிருந்தது; ஒவ்வொரு கறையிலும் ஒரு சம்பவம் உறைந்திருந்தது.

ஒவ்வொரு ஞாபகமாக மேலெழ எழ அவனது பாதங்கள் மண்ணில் புதைய மறுத்தன. ஒவ்வொரு அடியும் ஒரு யுகமாக நீடித்தது. அவனது நிலம், இப்போது காகிதத்தில் வேறொருவனின் பெயருக்கு மாறிவிட்ட அந்த ஐந்து ஏக்கர், தூரத்தில் மேக மூட்டத்திற்கு அடியில் மங்கலாகத் தெரிந்தது. அப்பாவின் சிகிச்சைக்கு வீட்டை விற்ற பணம் போதாத போது நிலத்தையும் சேர்த்து விற்க வேண்டி வந்திருந்தது.

அவன் மனதுக்குள் ஒரு போராட்டம் வெடித்தது. “நகரம் உன்னை வாழவைக்கும் மாரிமுத்து.. எத்தனையோ கனவுகளுடன் நாட்டின் எந்த மூலையிலிருந்தெல்லாமோ வரும் மக்களை வாழ வைக்கும் அந்தப் பெருநகரம் உன்னை மட்டும் கை விட்டு விடுமா? உனக்கும் ஒரு பிழைப்பு அங்கே காத்திருக்கும், இதைப்போல் இன்னும் பல சொத்துகளை நீ வாங்குமளவுக்கு உன்னை உயர்த்தும்” என்று அவனது வறுமை அவனிடம் பேசியது. ஆனால் அவனது மனமோ, அந்த நிலத்தில் புதைக்கப்பட்ட அவனது முன்னோர்களின் சாம்பலை நினைவூட்டியது. அந்த மண்ணில் பிறந்து அதே மண்ணில் கலந்த தாத்தன் மற்றும் பூட்டனின் அந்தச் சாம்பலில்தான் இந்த மண்ணின் சத்தும் கலந்திருக்கிறது. தன் ரத்தமும் சதையுமான ஒரு பகுதியை அறுத்தெறிந்துவிட்டு, வேறொரு இடத்தில் ஒட்டுப் போட்டு வாழ முடியுமா? எனத் தடுமாறினான்.

“மாரிமுத்து, இது உன் கோழைத்தனம் இல்லையா? உன் முன்னோர்கள் வாழ்ந்த மண்ணை இப்படி அனாதையாக விட்டுவிட்டு ஓடுகிறாயே?” மனசாட்சியின் இரைச்சல் தாளாமல் காதுகளைப்பொத்திக்கொண்டான். வாங்கிய கடனுக்கு நிலத்தையும் வீட்டையும், பறிகொடுத்தபின், இந்த வீட்டைப் பார்ப்பதே ஒரு குற்ற உணர்வாக அவனுக்குள் ஊறியிருந்தது. ஒவ்வொரு முறையும் அந்த வீட்டுத் திண்ணையில் உட்காரும்போது, அந்நியரின் வீட்டில் அமர்ந்திருப்பது போல் தவித்தான். அதை வாங்கியிருந்த உறவினன், “அண்ணே.. நீங்க வீட்டைக் காலி பண்ணனும்ன்னு இல்ல.. பெயருக்கு ஒரு தொகையை வாடகையாக் கொடுத்துட்டு நீங்களே இருந்துக்கலாம், அண்ணியையும் குழந்தையையும் கூட்டிக்கிட்டு வெளியேற வேண்டாம்” எனச்சொல்லியிருந்தும் அவனுக்கு அதற்கு மேல் அங்கிருக்க மனம் அப்போது கூசியது.

ஊர் எல்லையை நோக்கி அவனது நடை நகர்ந்தது. ஊரின் ஒவ்வொரு அங்குலமும் அவனோடு பேசத் தொடங்கியது. கிணற்றடியில் பெண்கள் நீர் இறைக்கும் சத்தம் இன்னும் காற்றில் மிதப்பது போல ஒரு பிரமை. மாட்டுத் தொழுவத்தில் எழும் சாணத்தின் மணம், அவனது நுரையீரலுக்குள் பழகிப்போன ஒன்று. ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் பெரியவர்களின் சிரிப்பொலி மூளையில் மங்கலாக ஒலித்தது. இவை எதுவுமே இனிமேல் அவனுக்குச்சொந்தமில்லை. இந்த ஊரைப்பொறுத்தவரை அவன் இனிமேல் ஓர் அந்நியன். இந்த ஊரிலிருந்த அவனது முகவரியைத்தொலைத்து விட்ட, வீடு வாசல் இல்லாத ஒரு ஏகாங்கி.

அவனது மன ஓட்டம் பின்னோக்கிச் சென்றது. ஒரு காலத்தில் ஊர்த்திருவிழாவில் முதல் மரியாதை பெற்ற குடும்பத்தின் வாரிசு அவன். இன்று விடியும் முன்பே திருடன் போல ஊரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறான். “மண்ணை நம்பினவனை அது என்னிக்கும் கை விடாது மக்களே” என்று தாத்தா அடிக்கடி சொல்வார். “மண்ணை நான் கைவிடவில்லை, ஆனா, அது என்னைக் கைவிட்டுவிட்டது தாத்தா. காலம் என்னிடம் இருந்த மண்ணைப் பிடுங்கியும் கொண்டது.” என விரக்தியுடன் காற்றிடம் புலம்பினான். வானம் பார்த்த பூமியில் மழை பொய்த்ததும், ஆழ்துளைக் கிணறுகள் வறண்டதும் அவனது கட்டுப்பாட்டில் இல்லாதவை. ஆனால் அதன் விளைவு இன்று அவனை நாடோடியாக மாற்றியிருக்கிறது. நிலம் மட்டும் விளைந்திருந்தால் கடன் வாங்க வேண்டிய தேவையே வந்திருக்காது.

குளக்கரையைத் தாண்டும்போது குளிர்ந்த காற்று அவனது முகத்தில் படர்ந்து சிலிர்ப்பூட்டியது. சிறுவயதில் இடுப்பில் சுரைக்குடுக்கையையும், காலி கேன்களையும் கட்டிக்கொண்டு அந்தக் குளத்தில்தான் அவன் நீச்சல் பழகினான். மணிக்கணக்கில் நண்பர்களுடன் மீன் பிடித்த அந்த மாலைப் பொழுதுகள் மனக்கண்ணில் ஓடின. இன்னும் விடிந்திருக்காத.. பறவைகள் கூட விழிக்காத முன்விடியலில் சுற்றுப்புறத்தின் அமைதி, அவனுக்குள் பெரும் இம்சையாக மாறியிருந்தது.

அவன் கால்கள் தார்ச்சாலையைத் தொட்டபோது, ஒரு நடுக்கம் அவனைத் தொற்றிக் கொண்டது. நகரத்தின் இரைச்சலுக்குள் தன்னைத் தொலைக்கப் போகிறோம் என்ற பயம், அவனது வயிற்றுக்குள் ஒருவித உறுத்தலை ஏற்படுத்தியது.

“அங்கு யார் என்னை என்ன உறவு சொல்லி அழைப்பார்கள்? அங்கு எந்த மரம் எனக்கு நிழல் தரும்? அங்கிருக்கும் காற்றில் என் ஊர் மண்ணின் வாசனை இருக்குமா?”

நகரம்… எந்திரத்தனமாய் இயங்கும் அங்குள்ள மனிதர்களுக்குப் பக்கத்து வீட்டுக்காரனின் பெயரே தெரியாது. இந்த கிராமத்து மண்ணிலோ, செடி கொடிகளுக்குக் கூடப் பெயர் உண்டு. ஒவ்வொரு வரப்புக்கும் ஒரு வரலாறு உண்டு. தான் பிறந்து, தவழ்ந்து, காதலித்து, வாழ்ந்த இந்த நிலப்பரப்பை விட்டுவிட்டு, எதற்காகவோ ஓடும் இந்தப் பயணம் எதில் முடியப் போகிறது? அடர்ந்த கான்க்ரீட் காட்டுக்குள் தனது சிறு கூட்டைக் கட்ட எந்த மரத்திலாவது இடம் கிடைக்குமா?

சூரியன் மெல்லத் தலைகாட்டத் தொடங்கியது. கிழக்கே சிவந்த வானம், அவனது வாழ்வின் ஒரு அத்தியாயம் முடிந்துவிட்டதை அறிவிப்பது போலிருந்தது. தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். கண்களில் கசிந்த ஈரத்தை மறைக்க அவனுக்கு யாரும் அங்கில்லை, ஆனாலும் அவன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்.

“இங்கேயே கூலி வேலை செய்தாவது பிழைக்கலாம்” என்றது ஒரு மனம். “வேண்டாம்.. ஓரே ஊரில் முதலாளியாய் இருந்துவிட்டு இப்போது கூலிக்காய் கையேந்துவது மரணத்தை விடக் கொடியது” என்றது இன்னொரு பக்கம். மானம் பெரியதா, வயிறு பெரியதா என்ற போரில் பல சமயங்களில் வயிறு வென்றுவிடுகிறது. ஆனால், அந்த வெற்றி ஒருபோதும் மனதிற்கு நிம்மதியைத் தருவதில்லை.

ஊர் எல்லையில் பேருந்து நிறுத்தம் இருந்த அந்தப் பாழடைந்த பிள்ளையார் கோயில் வந்தது. அதன் அரசமரம் காற்றில் சலசலத்தது. அந்தச் சத்தம் அவனுக்கு ஏதோ ஒரு எச்சரிக்கையைத் தருவது போலிருந்தது.

“ஓடுகிறாயா? அல்லது ஒளிந்து கொள்கிறாயா?”

அவன் குளக்கரையில் அமர்ந்தான். தண்ணீரில் தெரிந்த அவனது பிம்பம் அவனுக்கே அந்நியமாகத் தெரிந்தது. கையில் இருந்த பெட்டி, அவனது தோல்வியின் அடையாளம். இந்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு பட்டணத்திற்குப் போனால், அங்கே அவன் ஒரு வெறும் ‘எண்’ணாக மாறிவிடுவான். அங்கு அவனுக்கு முகவரி கிடையாது, குலதெய்வம் கிடையாது, சொந்தம் கிடையாது. அவன் கையில் இருந்த அந்தப் பெட்டிக்குள் சில துணிகளும், ஒரு பழைய குடும்பப் புகைப்படமும், காய்ந்து போன ஒரு பிடி மண்ணும் மட்டுமே இருந்தன. அதுதான் அவனது ஒரே சொத்து. இந்த மண்ணில் அவன் வாழ்ந்ததின் மிச்சம்.

அவன் தன் கைகளை ஊன்றி மண்ணில் ஆழமாகப் புதைத்து பின்னுக்கு லேசாகச் சாய்ந்து கொண்டான். மண் ஈரமாக இருந்தது. கடந்த வாரம் பெய்த அந்தச் சிறு தூறல், இன்னும் ஈரத்தைப் பாதுகாத்து வைத்திருந்தது. அந்த ஈரம் அவனது விரல் நகங்களுக்குள் ஏறியபோது, அவனுள் மின்சாரம் பாய்ந்தது போலிருந்த குளிர்ச்சியை கண்மூடி அனுபவித்தான். இனி எந்தப்பிறவியில் இந்த மண்ணைத்தீண்டும் பாக்கியம் கிடைக்கப்போகிறதோ!

தூரத்தில் ஒரு பேருந்தின் வெளிச்சம் தெரிந்தது. அது அவனை இந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப் போகும் ராட்சசன். பேருந்து வரும் சத்தம் அருகில் நெருங்கிக்கேட்டது. ஹாரன் சத்தம் காற்றில் கிழிந்து வந்து அவன் காதுகளை அடைந்தது. அந்தக் கணத்தில் மாரிமுத்துவின் மன ஓட்டம் திசை மாறியது. நகரத்தில், கிடைத்த வேலைகளைச்செய்து ஓடும்பிள்ளையாய் காலம் தள்ளவோ, செக்யூரிட்டி உடையணிந்து கொண்டு எந்திரமாக நிற்பதற்கோ அவன் பிறக்கவில்லை. அவனது கைகள் மண்ணைக் கிளறப் பிறந்தவை. நிலம் கைவிட்டுப் போயிருக்கலாம், ஆனால் இந்த மண்ணின் மணம் அவனுக்குச் சொந்தமானது.

பேருந்து வந்து நின்றது. நடத்துனர் தரையில் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும் அவனைப் பார்த்தார்.

“ஏறலையாப்பா?” எனக்கேட்ட நடத்துனரை ஏறிட்டுப்பார்த்த மாரிமுத்து தன் இரும்புப் பெட்டியை இறுகப் பற்றினான். பின் ஒரு கணம் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். கருமேகங்கள் மெல்லத் திரண்டு கொண்டிருந்தன. மழையின் வாசனை காற்றில் பரவியது. அவனது நிலம் அவனைக் கூப்பிடுவது போல அவனுக்குக்கேட்டது.

“இல்லை… நான் வரல…” என்று முணுமுணுத்தான்.

நடத்துனர் விசிலை ஊத, பேருந்து புகையைக் கக்கிக்கொண்டு நகரத் தொடங்கியது. அது கிளப்பிய புழுதி அவன் முகத்தில் படிந்தது. அந்தப் புழுதி அவனுக்குப் பிடித்திருந்தது. பெட்டியைத் தூக்கிக்கொண்டு மீண்டும் ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினான். குடும்பம் அவனைத்தொடர்ந்தது. இப்போது அவனது நடை வேகமாக இருந்தது. பூட்டிய வீட்டின் கதவைத் திறந்தபோது, அந்த ‘கிர்’ என்ற சத்தம் இப்போது ஒரு வரவேற்பு கீதமாக அவனுக்குக் கேட்டது.

வீடு.. அவனது வேர்கள் ஊன்றியிருக்கும் ஆதிமண். தாத்தனும் அப்பனும் பெற்றுப்பெருகி, குலம் வளர்த்த கோயில். அதிலிருந்து கொண்டே நிலத்தை மீட்டெடுக்கப் போராடுவான் அல்லது அதே மண்ணில் மடிவான். ஆனால், வேரற்ற மரமாகப் பிழைக்க அவனுக்கு விருப்பமில்லை. “என் வேர் இங்குதான் இருக்கிறது, இங்கிருந்து ஊன்றித்தழைத்து நானும் ஓர் விருட்சமாக எழுவேன்” எனச்சொல்லிக்கொண்டான்.

முற்றத்து வேப்பமரம் இப்போது இன்னும் பசுமையாகத் தெரிந்தது. மாரிமுத்து திண்ணையில் அமர்ந்து, தன் பெட்டியைத் திறந்து அந்தப் பழைய குடும்பப் புகைப்படத்தைப் பார்த்தான். அதிலிருந்த தூசியைத்துடைத்த கையோடு தன் கண்ணீரையும் துடைத்துக்கொண்டான். படத்தில் இருந்த அவனது தந்தை புன்னகைப்பது போலிருந்தது.

Author

You may also like

Leave a Comment