4
பரபரப்பான
கடைத்தெரு சந்தில்
ஏதோ ஒரு சன்னலோரம் நிற்கிறேன் நான்.
கடந்து போனவர்களில்
ஒருவன் மட்டும் பார்த்துக்
கொண்டே சென்றான்.
தெருமுனை தரையில்
ஒரு வறிய ஓவியன்
வரைந்துகொண்டிருந்தான்.
வேடிக்கை பார்த்தவர்களில்
ஒரு வெள்ளைக்காரி
மட்டும் காசு போட்டாள்.
சிறுநீர் உபாதைக்காக
கம்பத்தின் மீது காலைத்
தூக்கிய அந்த நாயை
விரட்ட நினைக்கவில்லை.
சாய்ந்திருந்த சுவரின்
சுண்ணாம்பு வண்ணம்
சட்டையில் ஒட்டிக்கொண்டதை
போல உணர்ந்தாலும்
முதுகைப் பார்க்க முயலாமல்
எனக்கு நானே
உதடசையாமல்
பேசிக்கொள்கிறேன் :
வாழ்வு “சௌக்கியமா”வில்
தொடங்கி “வரட்டுமா”வில்
முடிந்து போகட்டும்.