Home இதழ்கள்இதழ் 12நல்லாச்சி – 34
This entry is part 34 of 34 in the series நல்லாச்சி

பெரியதாத்தா வரும் தினங்களில்
இறக்கை கட்டிக் குதூகலிப்பாள் பேத்தி
வயலில் விளைந்தவையென கொண்டுவரும் மூட்டைக்குள்
தோட்டத்தில் உதிர்ந்தவையென
ஒன்றிரண்டு மயிற்பீலிகளும் இருப்பதுவும்
ஒரு காரணம்

ஆடலும்பாடலும் கதைசொல்லலுமாய்
தாத்தாவின் தோளில் நிழலாய்த்தொற்றி
நல்லாச்சியை மறந்து திரியும் பேத்திக்கு
ஒரேயொரு குறைதான்
தன் களித்தோழனிடம்
கைவிரலிடுக்கில் புகையும் கடைசி விரல்தான் அது
ஆருரைத்தும் கேட்காத அகந்தையை
அறிவுறுத்தி உடைக்க எண்ணுகிறாள் அவள்

தாத்தா புகைத்த துண்டுகளை
பொறுக்கிச் சேர்த்த பேத்தி
மூட்டையாய்க் கட்டுகிறாள் மயிற்பீலிகளுடன்
‘இனி இவையே எம்துணை
நீங்களில்லா வெற்றிடத்தை
இது சற்றேனும் இட்டு நிரப்பட்டும்’
மழலையில் சொன்னவளின் மதிமுகத்தில்
பயத்தின் ஈரம் பரவ
நெஞ்சுக்குழி துடிக்கிறது தாத்தாவுக்கு
இனி அதைத்தீண்டேன் எனச்சூளுரைக்கிறார்
இனியது என மகிழ்கின்றனர் அனைவரும்
ஆலமரத்தையே சாய்க்கும் ஆனை
அங்குசத்துக்கு அடங்குவது வழமைதானே.

Series Navigation<< நல்லாச்சி – 33

Author

You may also like

Leave a Comment