உடலெங்கும் பெருகியோடும்
வியர்வை நதியின்
ஓயாத் தீண்டலை
ஒதுக்கி விடுமென
தேடித்தேடி நில்லா இடம் விட்டு
நிழலென்ற அமுதத்தை நேசமென விரியவைக்கும்
கிளை பரப்பிக் கிடந்த
மரத்தின் கீழே
பாதையின் ஓவியத்தில் பகலிரவாய் உழைப்பைக் கூட்டி
தன்னையே கரைத்துவிட்ட
யாசகனைப் போலவே
பலனைத் தேடாத பக்தனென
நின்றுவிட்ட நிலையில்
ஆடாமல் அசையாமல்
வேடிக்கை பார்க்கத் துவங்கியது
கிளைக் கண்ணிலிருந்து மரம்.
நின்றுவிட்ட இயக்கத்தின்
நீள் கதையைச் சொல்லிச் செல்லும்
முனைப்புடன்
காற்றின் தீண்டலற்றுக் கிடக்கும்
கிளையெங்கும் கதிரோனின் கையெழுத்துப் பிரதிகள்.
உள்வாங்கும் காற்றைத் தேடி
விரியத் துவங்கும் இலைத்துளையின் பாதைகளில்
எழுந்து நிற்கின்றன வெயிலின் விரிகதிர்கள்.
கூடிக்கூடி விரட்டினாலும்
ஓடிப்போகாத உள்ளன்பின்
வீரியத்தில்
புன்னகை விரிந்தே
புத்தனாகிவிட்ட மலர்களின்
இருப்பிலிருந்து
ஒரு பூவேனும் உதிரட்டுமென்றே
காத்திருக்கும் மண்ணோடு
நானும் மூச்சு விடுகிறேன்
நகரத்தில் நிற்கும்
ஒற்றை மரத்தைப் பார்த்து
1
previous post