Home கவிதைதிருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 9

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 9

0 comments

தெலுங்கு மூலம்ஜாஃபர் பாஷா

ஒற்றை நட்சத்திரம்

வெளியே மழை பொழிகிறது
எனக்குள்ளும் மழை பொழிகிறது
ஒரு மேகம் இரு கண்களின்
பரஸ்பர சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டு
காலம் கண்களைத் துடைத்துக்கொள்கிறது

ஒரு எரிமலை வெடித்துச் சிதறியது.
என்னுள்ளும் நெருப்புப் பிரவாகம் பாய்கிறது.
அதில் எதிர்நீச்சலடிக்கும் உள் மனிதனின்
துயர அழுகை
அதுவொரு விரக வேதனை

காதல் வனத்தில் காட்டுத்தீ பற்றியது
மனதைத் தொட்ட நெருப்பு மூளைக்கும் பரவியது
ஒரு பசும் நினைவு
தீக்குள் பாய்ந்து சாம்பலானது…

என் பாதி உடலை காலி செய்துவிட்டு
அவள் இருட்டைப் போர்த்திக்கொண்டதும்
என்னுள்ளும் வெளிச்சம் மாயமானது.

வானம் ஜோடி நட்சத்திரங்களைப் பிரித்துவிட்டது.
வானம் துறந்துவிட்ட புள்ளி நிலத்தில் உதிர்ந்தது.
ஒருவேளை அது நான்தானோ என்னமோ?!
வானில் மீந்துபோன “ஒற்றை நட்சத்திரம்”
பூமியில் உள்ள பாதி நான்
உள்ளுக்குள் கனன்றுகொண்டே
இரவின் மடியில் ஒளிர்கிறோம்!!

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

You may also like

Leave a Comment