Home கவிதைநீல நிலவு

ஈரநிலவின் நறுமணம் கசியும் வெளியில்
இந்த இரவின் கிளைகளில்
வெண்முத்துப்பரல்களாய்க் குலுங்கும்
ஓராயிரம் நிலாமொட்டுகளின் நெற்றியில்
தன் மென்விரல்களால்
காற்றைத்தொட்டு
முத்தமாய்ப் பதிக்கிறது
ஒளித்துகள்களால் நெய்யப்பட்ட கவிதையை
ஆடையாய் உடுத்த இரவு

ஆசைகளின் அடர்ந்த மெளனத்தில்
தூங்காதிருக்கும் கவிதைகள்
இரவின் காதில் ரகசியமாய் மொழிபவற்றை
தன் யாழில் சேமித்துக்கொள்கிறான்
யாரோ ஒரு பாணன்

அப்பாடல்களின் வெளிச்சம்பட்டு
சுடரின் முத்துகளென
நீ தந்த அன்பின் தீராத அமுதம்
ஒவ்வொரு நிலாவிலும் வழியும்போது
நனைந்த நினைவுகளின் பாதையெல்லாம்
ஒளிப் பூக்களால் நிரம்பும் இந்த இரவில்
உன் வானத்தில் மிதக்கத் தொடங்குகிறது
என் மௌனமும் ஒரு நீல நிலவாக.

Author

You may also like

Leave a Comment