Home கவிதைநல்லாச்சி – 22
This entry is part 22 of 23 in the series நல்லாச்சி

சாப்பிடுவதற்கு
செரை படுத்தாத பேத்தி
ஏனோ
சில பொழுதுகளில் சுணங்குவதுண்டு
‘காத்தாட சாப்பிடுதேன்’ என்றபடி
கிணற்றடிக்குத் தட்டுடன் செல்பவள்
துலக்கி மினுக்கி மீள்வாள்
அம்மட்டில் திருப்தியுற்ற நல்லாச்சி
கண்டுகொள்ளாதிருக்கிறாள் சின்னவளை

‘காத்தாட’ தனித்துண்ணும் பொழுதுகள்
சந்தேகத்தை விதைக்கின்றன
அன்னையின் மனதில்
செல்லப்பேத்தியைச் சொல்லுக்கு ஆளாக்கினால்
ஆச்சி வீசுவாள் கண்டனக்கணையை
அகிலமே ஆச்சிக்கு அஞ்சும்போது
அன்னை எம்மாத்திரம்
எனினும்
புகையை ஒளிக்க இயலுமோ!!

கரையவிட்ட தோசைகள் சூரியகாந்தியாய்
தூக்கியெறிந்த கொழுக்கட்டைகள் சப்போட்டாவாய்
மோதகங்களெல்லாம் கொய்யாவாய்
செடிக்குச்செடி காய்த்திருக்க
கிள்ளிப்போட்ட இட்லிகளோ
பஞ்சுபஞ்சாய்ப்பூத்திருக்கின்றன
சிலையாகிறாள் நல்லாச்சி திகைப்பில்
ஒன்றும் தெரியாத பாவனையில்
நழுவுகிறாள் பேத்தி.

Series Navigation<< நல்லாச்சி – 21நல்லாச்சி – 23 >>

Author

You may also like

Leave a Comment