Home கவிதைநல்லாச்சி – 42

அரிசிஉளுந்து அளந்தெடுத்து
அண்டாநிறைய அரைத்துவைத்து
வெடிக்காத உப்புச்சீடையும் கருகாத வெல்லச்சீடையும்
பிரிபிரியாய்க் கைமுறுக்கும் பக்குவமாய் அதிரசமும்
பல்லில்லாத கிச்சாவுக்கு பதமான மைசூர்பாவுமாய்
அரங்குவீட்டில் அடுக்குகிறாள் நல்லாச்சி
‘எச்சியாக்கிராதியோ பிள்ளேளா..
கண்ணனுக்குப் படைச்சுட்டு ஒங்களுக்குத்தாம்’ என்றபடி
தொறவாலைப் பத்திரப்படுத்துகிறாள் இடுப்பில்
அரங்குவீட்டில் ஒரு கண்ணும்
பேரம்பேத்திகள் மேல் இன்னொரு கண்ணுமாக

பச்சரிசி ஊறவைத்து பக்குவமாய் தானரைத்து
மங்களமாய் மாக்கோலங்களை
இழைத்து இழைத்துப் போட்டுவிட்டு
கிருஷ்ணர் பாதமிட ஆயத்தமாகிறாள்
விசிலடித்துக் கூப்பிடுகிறது பால்குக்கர்
விரைந்தெழுந்து ஓடுகிறாள் நல்லாச்சி

திரும்புபவளைக் கேலி செய்கிறது வாண்டுக்கூட்டம்
இன்று
கிருஷ்ண ஜெயந்தியா அல்லது காந்தி ஜெயந்தியாவென
புரியாது விழிப்பவளுக்குக் காட்டுகின்றாள் பேத்தி
கிண்ணத்துமாவு சிந்தியதில் பதிந்த
நல்லாச்சியின் பாதச்சுவடுகள்
அடுக்களை வரை சென்றிருப்பதை
குஞ்சுக்கால்கள் வளர்ந்த மாயத்தை
போலியாய் வியக்கின்றன பொடிசுகள்
அசடையும் மாவையும் ஒருங்கே துடைத்தவள்
பேத்தியின் கன்னங்கிள்ளி முத்துகிறாள்
மாவு இடம்பெயர்கிறது கன்னத்துக்கு
முறைக்கும் பேத்தியைக்
கவனியாது நழுவுகிறாள் நல்லாச்சி
தலைக்குமேல் வேலை கிடக்கிறதாம்.

Author

You may also like

Leave a Comment