பாகப்பிரிவினை வேண்டி
சண்டித்தனம் பண்ணுகிறார் சின்னத்தாத்தா
எல்லாம் பகிர்ந்து முடித்தபின்
தோட்டத்திலிருக்கும் மாமரத்திற்காக
வந்து நிற்கிறது பஞ்சாயத்து
அடிபெருத்த மாமரம் மரப்பலகைக்காகுமென
அடிபோட்டுக்கொண்டிருக்கிறார் சின்னத்தாத்தா
காய்ப்பு முடிந்த முதியமரம்
கட்டில்செய்ய ஆகுமென்பது அவர் வாதம்
வாடாத பசுமரம் வாசமுள்ள பால்மரம்
கிளை கழித்தால் தளிர்க்கும்
முதிர்ந்தாலென்ன மூலையில் வாழட்டுமென
பெரியவர் கண்கசிகிறார்
இராத்தூக்கமென்பது இனி இராதென்பதுபோல்
கண்மூடிக் குமைகிறார்
பேத்தியின் ஆலோசனைப்படி தெளிகிறார்
அடிமரம் உனக்கு கிளையெலாம் எனக்கு
பிரி பாகத்தை என இறங்கிவருகிறார்
ஆனாலொன்று..
என் பாகத்தைச் சேதப்படுத்தாமல்
உன் பாகத்தை எடுத்துக்கொள் என்கிறார்
அடிமரமின்றி நுனிமரம் எங்ஙனம் பிழைக்கும்
குழம்புகின்றனர் கோள்மூட்டிய குறுக்குபுத்தியோர்
குறுஞ்சிரிப்புடன் நகர்கின்றனர் சான்றோர்
தங்கள் பாகத்துக்கிளையில்
பேத்திக்கு ஊஞ்சல் கட்டுகிறாள் நல்லாச்சி
புன்னகையுடன் உதவுகிறார் தாத்தா
சின்னத்தாத்தாவின் புகைச்சலை ரசித்தவாறே.