நல்லாச்சி – 40

This entry is part 40 of 41 in the series நல்லாச்சி

நல்லாச்சி உறங்குகிறாள்
சமையலறைப் பாத்திரங்கள் ஓசையின்றி
சைகையில் பேசிக்கொண்டிருக்க
தாழ்வாரம் வரை வந்து
தயங்கி தவிப்போடு அமர்ந்திருக்கும்
வெயிலின் தங்க நிறம்
படிகளில் தேன்துளிகளாய்த் தேங்குகிறது

பகலெல்லாம் ஓயாமல் உழைத்த களைப்பில்
பாயில் சாய்ந்திருக்கிறாள் நல்லாச்சி
இறகுகளை மெல்ல விரித்த தென்றல்
அவளுக்கு இதமாய் விசிற
காற்றில் கலைந்த நிழல்கள்
பூனைக்குட்டியாய் அவள் காலடியில் முடங்குகின்றன
முற்றத்தில் விளையாடும் பேத்தி
எட்டிப்பார்த்துக்கொள்கிறாள் அவ்வப்போது
அவளுக்கான கதைகள்தான்
இப்போது
நல்லாச்சியின் கனவுகளில் கருக்கொண்டிருக்கின்றன

அகில உலகமும் தன் இயக்கம் மறந்து நிற்க
காலமும் வெயிலும் வாசற்படியில் தவம் கிடக்க
சூரியனின் கதிர்களை அணைத்துக்கொண்டு
நல்லாச்சி உறங்குகிறாள்
பேத்தியும் காத்துக்கொண்டிருக்கிறாள்
அண்ணன் மீதான பஞ்சாயத்துக்கும்
கதைகளுக்குமாக.

நல்லாச்சி

நல்லாச்சி – 39 நல்லாச்சி – 41

Author

Related posts

விசுவநாதபுரி – 10

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 11

அறிவெழுச்சி: 11