நல்லாச்சி – 41

This entry is part 41 of 41 in the series நல்லாச்சி

இடித்த பச்சரிசி மாவும்
ஈருருண்டை வெல்லமும்
இரண்டுக்கும் தோதான தேங்காய்களுமாக
ஒளவையாரம்மன் கோவிலுக்குப்
புறப்பட்டுக்கொண்டிருக்கிறது
நல்லாச்சியின் குடும்பம்

உப்பொரு வகை இனிப்பொரு வகையென
அவித்து வைத்த கொழுக்கட்டைகளும்
அவை வெந்த நீரில் காய்ச்சிய கூழுமென
அம்மைக்கு இவர்கள் படைக்க
“முன்தயாரிப்பு வகைகளும் கிடைக்குது மக்ளே”
என்கிறாள் ஒளவை
“புதியவையோ சூடாக்கியவையோ யானறியேன்
ஊதித்தின்ற சுட்ட பழம் இன்னும் நெஞ்சினிக்க
ஊர்ப்பட்ட உப்புடன் பழங்கொழுக்கட்டை கரிக்குதையே
விநாயகன் பாடோ பெரும்பாடு
நீண்ட மூக்கு பொறுப்பதில்லை வாடையை”
ஒளவையின் வாய்மொழியோ
பிரம்மையின் ஒருதுளியோ
புரியாமல் விழிக்கிறாள் நல்லாச்சி
குதித்துக்கொண்டிருக்கிறாள் பேத்தி
தோவாளை கால்வாயில் குளிப்பதற்காக

குளிப்பதற்கும் கொழுக்கட்டைகளுக்கும்
ஆடிச்செவ்வாய்கள் வந்துபோகின்றன
ஒளவையாரையும் பிள்ளையாரையும்தான்
அங்கே காணோம் இப்போதெல்லாம்
கைலாயத்தில் வாசக்கொழுக்கட்டைகள் கிடைக்குமென
போய்விட்டதாய்க் கேள்வி.

Series Navigation<< நல்லாச்சி – 40

Author

Related posts

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6:  உடையும் அரண்கள்

ராம நாமமொரு வேதமே

ஞான நூல்கள் – 12 & 13