Home இதழ்கள்இதழ் 13நல்லாச்சி – 35
This entry is part 35 of 39 in the series நல்லாச்சி

பாகப்பிரிவினை வேண்டி
சண்டித்தனம் பண்ணுகிறார் சின்னத்தாத்தா
எல்லாம் பகிர்ந்து முடித்தபின்
தோட்டத்திலிருக்கும் மாமரத்திற்காக
வந்து நிற்கிறது பஞ்சாயத்து

அடிபெருத்த மாமரம் மரப்பலகைக்காகுமென
அடிபோட்டுக்கொண்டிருக்கிறார் சின்னத்தாத்தா
காய்ப்பு முடிந்த முதியமரம்
கட்டில்செய்ய ஆகுமென்பது அவர் வாதம்
வாடாத பசுமரம் வாசமுள்ள பால்மரம்
கிளை கழித்தால் தளிர்க்கும்
முதிர்ந்தாலென்ன மூலையில் வாழட்டுமென
பெரியவர் கண்கசிகிறார்
இராத்தூக்கமென்பது இனி இராதென்பதுபோல்
கண்மூடிக் குமைகிறார்

பேத்தியின் ஆலோசனைப்படி தெளிகிறார்
அடிமரம் உனக்கு கிளையெலாம் எனக்கு
பிரி பாகத்தை என இறங்கிவருகிறார்
ஆனாலொன்று..
என் பாகத்தைச் சேதப்படுத்தாமல்
உன் பாகத்தை எடுத்துக்கொள் என்கிறார்
அடிமரமின்றி நுனிமரம் எங்ஙனம் பிழைக்கும்
குழம்புகின்றனர் கோள்மூட்டிய குறுக்குபுத்தியோர்
குறுஞ்சிரிப்புடன் நகர்கின்றனர் சான்றோர்
தங்கள் பாகத்துக்கிளையில்
பேத்திக்கு ஊஞ்சல் கட்டுகிறாள் நல்லாச்சி
புன்னகையுடன் உதவுகிறார் தாத்தா
சின்னத்தாத்தாவின் புகைச்சலை ரசித்தவாறே.

Series Navigation<< நல்லாச்சி – 34நல்லாச்சி – 36 >>

Author

You may also like

Leave a Comment