- அசுரவதம் -1 முதல் சந்திப்பு
- அசுரவதம் : 2 – காலகேய தானவன்.
- அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன்
- அசுரவதம் : 4 – மாயமான மாரீசன்
- அசுரவதம் : 5 – புதுவரவு
- அசுரவதம் 6: – முந்திச் செல்லும் விதி
- அசுரவதம் -7: வழிநடத்தும் வல்வினை
- அசுரவதம்:- 8 – வீழ்ந்தக் காதல்.
- அசுரவதம் : 9 – வஞ்சின வஞ்சி.
- அசுரவதம்: 10 – பழியின் பயணம்.
- அசுரவதம்: 11 – நெடிது நின்ற நாயகன்.
- அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு
- அசுரவதம்: 13- சதியின் தொடக்கம்
- அசுரவதம்: 14 – மாயமான், மா எமன்!
- அசுரவதம்: 15 – உருமாறும் இரு மான்கள்
- அசுரவதம்: 16- ஓ சீதா.. ஓ இலக்குவா
- அசுரவதம்: 17- சிரிக்கும் மூவர்
- அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.
- அசுரவதம்: 19 – பறக்கும் அதிசயம்.
- அசுரவதம்: 20 – வீழ்ந்த சிறகுகள்
- அசுரவதம்: 21 – நீண்ட கரங்கள்.
- அசுரவதம் பாகம்: 2 (அத்தியாயம் 1: விடுதலையை நோக்கி)
- அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 3: சபரியின் தோழி)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 4: மனைவி என்னும் மதியூகி )
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 8: சபரி மோட்சம்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 9: புதிய நட்பு
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 10 – சொல்லின் செல்வன்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 11 – இணைந்த கைகள்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 – இரு மகளிர் .. இரு சிந்தனை.
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 13 – போகாதே.. போகாதே.. என் கணவா
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 14 – அறத்தின் விலையும் – தாரையின் சாபமும்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 15: மீண்டும் ஒரு சதி
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 17: நீறு பூத்த நெருப்பு
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 18: இருட்குகையும் அகக்கண்ணும்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 19: நிழல் காவல்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 20: கந்தர்வ மகள்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்
- அசுரவதம் – பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6: உடையும் அரண்கள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 7: உடைந்த உண்மை.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 9: படபடத்த பட்டாம்பூச்சி
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 8: மாயைக் குகைகள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 10: தாய்க்கு ஒரு தாலாட்டு
“இராமா… இராமா…” என்று அனுமன் தன்னை மறந்து கத்திய அந்தக் கூச்சல் சீதையைத் தவிர்த்து வேறு யாரும் கேட்டிருக்கவில்லை.
திரிகூட மலையில் அனுமன் ஆழ்ந்து சிந்தித்த கணத்தில் பட்டாம்பூச்சிகள் இங்கே வழிநடத்தும் முன் ஒன்றை உணர்ந்திருந்தான். தன் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒற்றர்களால் கண்காணிக்கப்படுகின்றன. இனி எடுக்கும் எந்த நகர்வும் அவர்கள் அறியாத ஒன்றாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தான்.
மலை உச்சியிலிருந்து சுற்றும் முற்றும் பார்த்தான். விரக்தியைக் கண்ணில் தேக்கி வெளியே செல்ல விரும்பும் ஒரு தோல்வியடைந்த வீரனைப் போலத் தன்னைக் காட்டிக்கொண்டான். ஆங்காங்கே தன்னைக் கண்காணிக்கும் கண்கள் மறைந்திருப்பதை உணர்ந்து அவர்களின் போக்கில் அவர்களை வீழ்த்த எண்ணினான்.
“இனி என்ன பயன்.. அண்ணலே ராமா, இதோ என் தோல்வியை அறிவிக்க வந்துகொண்டே இருக்கிறேன்!” என்றபடி கடலை நோக்கித் தாவினான்.
அவன் உடல் கடலில் மூழ்கியதை மட்டுமே ஒற்றர்கள் கண்டனர். ஆனால் ஒரு அணில் கடலிலிருந்து வரும் அதிசயத்தை யாரும் கவனிக்கவில்லை. அந்த அணில் அந்தத் திரிகூட உச்சியில் அமர்ந்து தியானத்தைத் தொடர்ந்ததைப் பார்த்திருந்தாலும் யாருக்கும் அது அனுமன் தான் என யோசித்திருக்கவும் வாய்ப்பில்லை.
அணிலின் வடிவில் இருந்த அனுமனை பட்டாம்பூச்சிகள் வழிநடத்தி அசோக வனத்திற்குச் செலுத்தியபோதுதான் சீதை தன்னை முடித்துக்கொள்ளும் அந்த முடிவில் இருந்தாள்.
அனுமனின் அந்த இராமா என்னும் சொல்லைக் கேட்டு, ‘இதுவும் அரக்க மாயையோ? இந்த வனத்தில் அவரின் பெயரைத் தெரிந்தவர் யார்? இத்தனை மதுரமாக, இத்தனை அன்புடன் கூறுபவர் யாராக இருக்கக்கூடும்?
இந்தக் குரல் எனக்கு அச்சத்தை ஊட்டுவதற்குப் பதில் என்னை ஆசுவாசப்படுத்துகிறது. இந்தக் குரல் என்னுள் ஏதோ ஒன்றைத்தூண்டி நம்பிக்கையை விதைக்கிறது’ என நால் திசையையும் பார்த்தாள்.
திகைத்தாள்.
அத்தனை அரக்கியரும் உறங்கிக்கொண்டிருந்தனர்.. அவளின் உற்றத்தோழியான திரிசடையும் கூட.
இராவணன் அத்தனை அதிகாலையில் அசோகவனத்தை நோக்கிச் செல்வதைக் கவனித்து பதைபதைப்புடன் அவனைத் தொடர்ந்து வந்திருந்த சூர்ப்பநகை, சீதை தன்னுயிரை நீக்கிக்கொள்ளச் சென்றதை ஒளிந்திருந்தவாறு கண்டபோது தன் மனதை மீண்டும் குரூரமாக்கிக்கொண்டாள்.
சீதை இறந்தால் உண்டாகும் விளைவுகளை யோசித்தாள். அவளின் மனது பலவாறாகக் கணக்கிட்டன. இராவணன் தன் மகளைக் காமத்துடன் அணுகும் பேரபாயம் நீங்குவதோடு, இராமனுக்கு அது மேலும் சீற்றத்தை உண்டாக்கி இராவணனை அழிக்க இன்னும் தீவிரமாக வருவான் என்று நினைத்தாள். அரக்கியர் கூட்டம் சீதையின் முடிவைத் தடுக்காமல் இருக்க அவர்களை மாய நித்திரையில் தள்ளினாள். சீதை கழுத்தில் அந்தக் கொடியை மாட்டியதும் அவளின் முடிவைக் காணச் சகிக்காமல் தன் கண்களில் வடிந்த நீரைத் துடைத்துக்கொண்டே பெருமூச்சுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
அனுமன் அச்சத்தில் கத்திய அடுத்த கணம் சீதை உயிரை விட்டுவிடுவாள் என்ற பதைபதைப்பில், அவசரமாகக் கீழே குதித்து அவளைத் தடுக்க நினைத்தான். ஆனால், திடீரென முன்னால் குதித்தால், அந்த அதிர்ச்சியிலேயே அவள் உயிர் பிரிந்துவிடக்கூடும் என்று அவனது கூரிய மதி எச்சரித்தது. அவளை அந்தத் தற்கொலை முடிவிலிருந்து மீட்க ஒரே வழி, அவளது மனதைக் குளிர்விப்பது மட்டுமே!
அந்தக் காலை நேரத்தின் நிசப்தத்தில், மரக்கிளைகளின் அடர்ந்த இலைகளுக்குள் மறைந்திருந்தவாறே, அனுமன் மிக மெல்லிய குரலில் பாடத் தொடங்கினான். ஒரு தாய் தன் குழந்தையை உறங்க வைக்கப் பாடும் மென்மையான தாலாட்டைப் போலப் பனித்தது அவனது குரல்.
“அழுதிடாதே சீதா அம்மா … அழுதிடாதே அம்மா!
ஆறுதல் சொல்ல வந்தேனம்மா
ராம தூதன் நானே அம்மா..
சித்திரமாம் அயோத்தியிலே பிறந்தாரே ராமசாமி,
சீர்திருத்த மணம் முடித்து உனைக்கரமும் பிடித்தாரே..
வில்லொடித்து உனை மணந்த வித்தகராம் ராமபிரான்,
விதிவசத்தால் கானகம் வந்து துயரங்கள் அடைந்தாரே..
ராவணனோ உனைச் சிறைவைக்க ராமனோ தேடி வாரார்,
ஆழியைக் கடந்து வந்தேன் உன் அடையாளம் காணவே..
உயிர்விடத் துணியாதே அம்மா உத்தமியே சீதா அம்மா,
உயிரோடு உனை மீட்பார் உன்னதமாம் ராமசாமி!”
மரத்தின் மேலிருந்து, தேனைப் போல வழிந்த அந்தப் பாடலைக் கேட்ட மறுகணம், சுருக்குக் கொடியைப் பிடித்திருந்த சீதையின் கைகள் அப்படியே உறைந்து நின்றன.
‘யார் அது? என் உயிரை மீட்டும் இந்தக் கதையை, பெண்ணின் பிரிவைத் தாலாட்டுவதைப் போல இந்த மாய நரகத்தில் பாடியது யார்?’
என்று சீதை தன் மரணத்தைத் தள்ளிப்போட்டுவிட்டு, அந்த இருண்ட மரக்கிளைகளை உற்று நோக்கினாள்.
இலைகளின் மறைவிலிருந்து, மிகச் சிறிய உருவத்தோடு அணில் ஒன்று அவள் மடியில் வீழ்ந்தது. அந்த அணில் அவளை வணங்கி முன் நின்றது.
சீதை அதை அதிர்ச்சியோடு பார்த்தாள். அவளது முகம் சட்டெனக் கடினமானது. இராவணனின் மாய வலைகளைப் பற்றி அவள் அறிவாள்.
“நில் அங்கே!” என்றாள் சீதை. அவளது குரலில் சந்தேகமும், கடுமையும் தர்க்கமும் குடிகொண்டிருந்தன.
விரக்தியாகச் சிரித்தாள். அணில் பாடும் குரல் அவளைச் சந்தேகத்திற்கு உள்ளாக்கியது.
சந்தேகம் என்பது அறிவின் கவசம். பலத்த காயம்பட்ட மனதின் தற்காப்பு அரண் அது. ஒருமுறை ஏமாற்றப்பட்ட மனம், உலகத்தின் அத்தனை உண்மைகளையும் சந்தேகத்தின் தராசிலேயே நிறுத்துப் பார்க்கும். சந்நியாசியின் வேடத்தில் வந்த வஞ்சகத்தை அனுபவித்தவளுக்கு, அணிலின் வடிவில் வரும் அன்பும் சூழ்ச்சியாகவே படும்.
வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் உள்ளுணர்வு எப்போதுமே கூர்மையானது. அது கற்பனையான அபாயங்களைக் கூட நிஜமென உருவகப்படுத்தி அவளை எச்சரித்துக்கொண்டே இருக்கும்.
“பத்துத் தலை கொண்ட அரக்கனே சந்நியாசி வேடத்தில் வந்த பூமி இது. மாய அரக்கர்கள் எந்த உருவமும் எடுப்பார்கள் என்பதை நான் அறிவேன்,” என்றாள்.
பின் அவள் மனது திடமானது. அரக்கனோ அல்லது அணிலோ.. இராமனின் நாமம் சொல்லும் இந்தக் குரலில் எந்தப் போலித்தன்மையும் இல்லை என்பதை உணர்ந்து அந்த அணிலைத் தன் கைகளில் எடுத்துத் தடவிக் கொடுத்து மீண்டும் கீழே விட்டாள்.
“நீ யார், உன் உருவைக் காட்டு, உன்னை சந்தேகிக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் இருக்கும் சூழல். யார் நீ.. என் பரம்பொருள் என் உயிர் நாயகன் மீது ஆணை!” என்றாள்.
அனுமன் தன் உண்மையுருவில் வானரமாக எதிர் நின்றான். அந்த உருவைக் கண்டதும் அவள் மனம் மீண்டும் சஞ்சலப்பட்டது.
“உண்மையைச் சொல், மானிடர்கள் வாழும் அயோத்தியிலிருந்து ஒரு குரங்குக்கு எப்படித் தொடர்பு ஏற்பட்டது? எந்தை ஜடாயுவுமே இறந்துவிட்டார். அவருக்குத் தொடர்புடையவனா நீ? மேலும் எந்தக் குரங்காவது என் நாதனோடு சேவகம் செய்ய முடியுமா?”
அனுமன் கைகட்டி, வாய் பொத்தி, பவ்யமாக நின்றான்.
“இல்லை தாயே… நான் உண்மையாகவே இராமனின் தூதன்தான். உங்கள் கணவரின் கட்டளைப்படியே கடல் தாண்டி இங்கு வந்தேன்.”
சீதை நம்பிக்கையின்றி அயற்சியோடு அவனைப் பார்த்தாள். அவள் மனம் நிலையில்லாது துடித்துக் கொண்டிருந்தது.
அவளது அகத்தவிப்பைப் புரிந்துகொண்ட அனுமன், தன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த ஒன்றைப் பயபக்தியோடு கையில் எடுத்தான்.
“அன்னையே, உங்களுக்கு என் சொற்கள் மாயையாக இருக்கலாம். ஆனால், இதோ என் இராமபிரான் உங்களிடம் கொடுக்கச் சொன்ன அவரது கணையாழி!” என்று கூறி, அந்தப் பொன் மோதிரத்தை நீட்டினான்.
அந்தக் கணையாழியைக் கண்ட மறுகணம், அதுவரை ஒரு பேதைப் பெண்ணின் தவிப்போடு, தர்க்கம் செய்யும் தவிப்பான பெண்ணாக இருந்த சீதையின் அத்தனை வைராக்கியமும் சுக்குநூறாக உடைந்தது.
அவள் கண்கள் அருவியாகின. மூச்சுக் காற்றுக்காகக் கடலில் மூழ்கித் தத்தளிக்கும் உயிர், பெரும் மரக்கலத்தைக் கண்டது போலப் பேருவகை கொண்டாள்.
அந்த மோதிரத்தைத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டு, மார்போடு இறுக்கி அணைத்துத் தேம்பித் தேம்பி அழுதாள்.
“அவர் என்னை மறக்கவில்லை!” என்று விம்மினாள்.
அந்த ஒற்றைச் சொல் அவளின் மொத்த நிலையையும் அனுமனுக்கு விவரித்தது.
அவள் நினைத்திருந்தால், இந்த இலங்கையைச் சுட்டெரித்திருக்க முடியும். ஆனால் அவள் இராமனின் வருகைக்காக அத்தனைக் கொடுமைகளைத் தாங்கி உயிர்த்திருக்கிறாள், காத்திருக்கிறாள் என்பதை உணர்ந்தான்.
அவளுடைய உணர்ச்சிகளின் கொந்தளிப்பு சற்றே அடங்கியதும், சீதை தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அனுமனை உற்று நோக்கினாள்.
அவள் முகத்தில் தாய்மை கனிந்திருந்தது. அச்சம் அகன்றிருந்தது, வேற்றிடம் என்ற பேதமை மறைந்து தானிருக்கும் இடத்தின் அரசி தானென்ற தோரணை வந்தது. இருந்தும் தன் வீட்டுக்கு வந்த பசியோடு இருக்கும் ஒரு விருந்தாளியைப் பார்க்கும் கருணைமிகுந்த தாயின் முகமாக மாறியது.
தாய்மை என்பது உடலின் அனிச்சை செயல், ஆன்மாவின் ரசவாதம். தான் மரணத்தின் விளிம்பில் நின்றாலும், தன் வயிறு காய்ந்து சுருங்கியிருந்தாலும், தன்னிடம் அன்போடு வரும் ஒரு ஜீவனைக் கண்டால் பெண்ணுக்குள் சுரக்கும் முதல் உணர்வு தாய்மைதான்.
இராவணன் சந்நியாசியாக வந்து பசி என்று நின்றபோதிலும் அவளுக்குள் தோன்றிய அதே தாய்மை உணர்வுதான் இது.
அது தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டது. தன் மாபெரும் துயரத்தை ஒரு கணம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, எதிரே இருப்பவனின் பசியைப் பற்றி யோசிக்க வைக்கும் மாபெரும் பிரபஞ்ச சக்தி அது. உலகத்தின் எந்தக் கொடிய அரக்கனும் ஒரு பெண்ணின் உள்ளே உறங்கும் அந்தத் தாய்மையை அழித்துவிட முடியாது.
“மகனே…” என்றாள் சீதை. அந்தச் சொல்லில் தாய்மையின் பரிவு திரண்டிருந்தது.
“மகனே என்னைக் காண, எனக்காக அந்தக் கொடிய கடலைத் தாண்டி வந்திருக்கிறாயே, இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்த உனக்குப் பசிக்காதா? உன் முகம் களைத்திருக்கிறதே! ஆனால்… அடவிக்குள்ளே அடைபட்டுக் கிடக்கும் இந்தத் துரதிர்ஷ்டவசமான தாயிடம், உன் பசியைப் போக்க ஒரு சிறு கனி கூட இல்லையே மகனே!” என்றாள்.
இதுவரை திடமாக இருந்த அனுமனின் இதயம் உருகிவிட்டது. உலகமே அஞ்சும் அசுரர்களின் சிறையில், மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் ஒரு பெண், தன் சொந்தத் துயரத்தை மறந்துவிட்டுத் தன்னிடம் ‘உனக்குப் பசிக்கிறதா’ என்று கேட்கிறாள் என்றால், அதுதான் தாய்மையின் உச்சம்.
“அன்னையே… உங்கள் தரிசனமே என் பசியைப் போக்கிவிட்டது. நீங்கள் கலங்காதீர்கள்,” என்று கூறினான் அனுமன்.
ஆனால் சீதையின் கண்கள் அனுமனின் அந்தச் சிறிய உருவத்தையே கவலையோடு பார்த்தன.
அன்னையின் அந்தச் சந்தேகத்தைப் போக்குவது ஒரு தூதனின் கடமை என்பதை அனுமன் உணர்ந்தான்.
“தாயே, இந்தச் சிறிய உருவம், எதிரிகளின் கண்களில் படாமல் இருப்பதற்காக நான் எடுத்துக்கொண்ட வேடம் மட்டுமே. இராமபிரான் படையில் இருப்பவர்கள் அத்தனை பேரும் மாவீரர்கள். என்னை விட நூறு மடங்கு உயர்ந்தவர்கள். கலங்க வேண்டாம்,” என்றான் அனுமன்.
சீதையின் கண்களில் தோன்றிய அந்தச் சலனம் அவனைக் கலங்கச் செய்தது.
அடுத்த கணம், சிறிய குரங்காக நின்றிருந்த அனுமனின் உடல் மெல்ல மெல்ல விரிவடையத் தொடங்கியது. அவனது தோள்கள் அகன்றன. மேரு மலையைப் போலப் பிரம்மாண்டமாக, வானளாவிய உயரத்தில் நின்றான் அனுமன்.
அவனது கண்கள் இரண்டு சூரியன்களைப் போலப் பிரகாசித்தன. அவனது முடிகள் தங்கக் கம்பிகளைப் போலச் சிலிர்த்து நின்றன. இலங்கையின் கோட்டைகளை விட உயர்ந்து நின்ற அவனது அந்தப் பேருருவைக் கண்ட சீதையின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
‘இவ்வளவு மாபெரும் சக்தி கொண்ட ஒருவன், என்னிடம் சிறு குரங்காகப் பணிந்து நிற்கிறானே!’ என்று அவளது அகம் நெகிழ்ந்தது.
மீண்டும் தன் உடலைச் சுருக்கிச் சீதையின் முன்னால் வந்தமர்ந்தான் அனுமன்.
“தாயே! இராமனின் படை சாதாரணமானதல்ல. உங்கள் அனுமதியிருந்தால், இப்போதே உங்களை என் தோளில் சுமந்துகொண்டு கடலைத் தாண்டி இராமனிடம் சேர்த்துவிடுவேன்!” என்றான் உறுதியான குரலில்.
அவனின் பேருரு சீதைக்கு மட்டுமே காணும் வகையில் உலகெங்கும் வியாபித்திருந்தது.
சீதையின் முகத்தில் இப்போது மரணத்தின் நிழல் இல்லை. அங்கே நம்பிக்கையின் ஒளி பிரகாசித்தது. தற்கொலை செய்துகொள்ளத் துணிந்தவள், இப்போது இராமனின் வருகைக்காகக் காத்திருக்கும் வீரப்பெண்ணாக, ஒரு தாயாகப் புத்துயிர் பெற்றிருந்தாள்.
“கோழையைப் போல் தப்பித்து ஓடிவிடச் சொல்கிறாயா?” எனச் சினத்தின் உச்சியில் சொன்னாள் சீதை.
அவள் கண்களில் சினம் பெருநெருப்பாகக் குடிகொண்டிருந்தது.
(தொடரும்)